Saturday, January 23, 2021

பாவாத் பாவம் : 2ம் பாவம்

பாவாத் பாவம் :  2ம் பாவம் 

 இரண்டுக்கு உரிய சுக்கிரன் மறு இரண்டில் இருக்கிறார். அதாவது மிதுனத்தில். பெரும்பாலும் அவருடன் சூரியனும் புதனும் சேர்ந்தே இருப்பார்கள். சூரியன் பகை. புதன் நண்பர். சூரியனுடன் அஸ்தாங்கதம் ஏற்பட்டால் சுக்கிரன் பலம் இழந்து விடுவார். புதனும் அப்படியே. பலக்குறைவால் மாரகம் குறையும். உண்மை தான். ஆனால் மற்ற காரகத்துவங்களும், ஆதிபத்தியங்களும் வீணாகிவிடும். இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது. காரகத்துவம் என்பது ஒரு மனிதனின் கண், காது, மூக்கு,  வாய் போன்ற அவயவங்கள். இவைகள் மாறாதவை. ஆதிபத்தியம் என்பது சட்டை, வேட்டி, கண்ணாடி, தொப்பி போன்றவை ஆகும். லக்னத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். சுக்கிரனும், புதனும் அஸ்தாங்கதம் அடையாமல் இருந்து 9 ஐப் பார்க்க, அது தனுசு. பாக்கிய ஸ்தானம். 

மூன்று என்பது கால் மறைவு ஸ்தானம். நல்லதும், கெட்டதும் தரும் இடம். திடம், வீரம், பராக்கிரமம், தைரியம்,  இளைய சகோதரம், சகாயம் என்று இன்னும் எவ்வளவோ! மூன்றில் புதன் ஆட்சி. அவர் 6க்கும் உரியவர். ஆதி பத்திய விஷேசம் இல்லாதவர். 6க்குக் கேந்திரத்தில் இருக்கிறார். சுக்கிரன் தன, களத்திராதிபதி, பாவாத் பாவம். ஒரு கேந்திரத்திற்கு உரியவராகி பாதி கேந்திராதிபத்ய தோஷமும் உள்ளவராவார்.சூரியன் பஞ்சமாதிபதி, கோணாதிபதி, பூர்வ புண்யாதிபதி,  யோக கிரகம். சம ஸ்தானத்தில் இருந்து நட்பைப் பார்க்கிறார். யோகம் பேசும். 

குரு தனுசில் இருப்பதாகக் கொள்வோம். குரு பாக்கியத்தில் ஆட்சி,  மூலத் திரிகோணம். அவர் இருப்பை விட பார்வைக்கே வலிவு அதிகம். பலம் உள்ள பார்வை. சூரிய, சுக்கிர, புதன் சுபத்வம் அடைவார்கள். காரகத்துவங்களும் ஆதிபத்தியங்களும் கூடச் சிறக்கும். குரு விரயாதி பதியும்  கூட. பலம்  அடைந்ததால் விரயம் கட்டுக்குள் இருக்கும். 

தற்போது செவ்வாயும் தனுசில் இருப்பதாகக் கொள்வோம். எடுத்த எடுப்பில் குரு மங்கள யோகம். மித்திரர்கள். இரு கோணாதிபதிகள் சேர்க்கை. செவ்வாய்  கேந்திர கோணாதிபதி. பாக்கியாதிபதியை  விடப் பலன் அதிகம் தருபவர். யார் லக்னாதிபதியோ அவர் ஒரு முதல்  கோணத்திற்கும் முதல் கேந்திரத்திற்கும் உரியவர் ஆவார். இது ஒரு சிறப்பு. எந்தவொரு கிரகம் ஒரு கோணத்திற்கும் ஒரு கேந்திரத்துக்கும் உரியதாக வருகிறதோ அந்த கிரகம் ராஜ யோகம் செய்யும். செவ்வாயும், குருவும் ராஜ கிரகங்கள். மற்றும் ஒரு ராஜ கிரகமான சூரியனைப் பார்க்கிறார்கள். ராஜ கிரக சம்பந்தம். மற்றும் சுக்ரனையும், புதனையும் பார்ப்பார்கள். சுக்கிரனுக்கும், புதனுக்கும் இன்னும் சுப பலன்கள் கூடும். 

இப்போது சந்திரனும் தனுசில் இருப்பதாகக் கொள்வோம். உடனே கஜ கேசரி யோகம், குரு சந்திர யோகம், மற்றும் சந்திர மங்கள யோகம் அல்லது சசி மங்கள யோகம் ஏற்படும். சந்திரன் ஒற்றை வீட்டுக்காரர். ஆகவே கேந்திராதிபத்திய தோஷமும் குறைவு. இங்கு மூன்று பேருமே மித்திர்கள். ஒவ்வொருவராலும் மற்றவருக்கும் பலம். இடமும் முறையே ஆட்சி, நட்பு, சமம் என்ற அளவில் இருக்கிறது.  செவ்வாய் இங்கே உச்சாரோகணம் மற்றும் உச்சாபிலாஷா. மூலத்தில் இருப்பது சிறப்பு. ஏனெனில் கேது செவ்வாயைப்போலப் பலன்.

சந்திரன் பூராடத்தில் இருந்தாலும் சிறப்பே. சுக்கிரனும் சந்திரனும் பெண் கிரகங்கள். மேலும் அவர்கள் திக் பலம் அடையும் இடமும் 4. இது ஒரு ஒற்றுமை. குரு உத்திராடத்தில் இருந்தால் அது மித்ர சாரம். மிதுனத்தில் சூரியன் புனர்பூசத்தில் இருந்தால் அதுவும் மித்ர சாரம் தான். அது நட்சத்திரப் (சார) பரிவர்த்தனை. ஸ்தானப்பரிவர்த்தனையை விட நட்சத்திரப் பரிவர்த்தனை பலம் கூட. பலனும் அதிகம்.

 சுக்கிரன், செவ்வாய் சாரத்தில் இருப்பதும், புதன், ராகு சாரத்தில் இருப்பதும் பரவாயில்லை. சுக்கிரன் தன் ஸ்தானங்களுக்கு 2, 9 ல் இருப்பதும், புதன் தன் ஸ்தானங்களுக்குக் கேந்திரங்களில் இருப்பதும், சூரியன் தன் ஸ்தானத்திற்கு 11 ல் இருப்பதும் நல்லது தான். ஆனால் சந்திரன் மட்டும் தன் ஸ்தானத்திற்கு 6 ல் இருக்கிறார். அதுவும் பாக்கியத்தில், மித்ரர்களுடன். பெரிய குறை ஒன்றும் இல்லை. 

தற்போது சனி எங்கிருந்தால் நல்லது என்று பார்ப்போம். சனி துலாத்தில் உச்சம். பலன் பெரிதாக ஒன்றும் இல்லை. ஆனால் 3ம் பார்வையால், பாக்கியத்தையும், 7ம் பார்வையால் மேஷத்தையும், 10ம் பார்வையால், கடகத்தையும் பார்ப்பார். மேஷமும், கடகமும் வீணாகி விடும். 3 ம் பார்வையால் செவ்வாயும், சந்திரனும் வீணாகி விடுவார்கள். சனியை இடம் மாற்றி கும்பத்தில் வைத்தால் அது ஆட்சி மற்றும் மூலத் திரிகோண ஸ்தானம். ஆயினும்  பாதக ஸ்தானம். மேஷ, சிம்ம, விருச்சிகம்  கெட்டு விடும். கடும் பகை. சிறிது மாற்றி மகரத்தில் வைத்தால் கடகம் சிறிது   பாதிப்புடனும், மீன, துலாம் பாதிப்பு இல்லாமலும் தப்பித்துக் கொள்ளும். 

இப்போது ராகு, கேது எங்கே இருந்தால் நலம் என்று யோசித்தால் அவர்களுக்கு உகந்த இடம் உச்சம் தான். ராகு ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும் இருப்பதே சிறப்பு. 

நாம் எடுத்துக் கொண்ட விஷயம் மேஷ லக்னத்திற்கு இரண்டுக்குரிய சுக்கிரன் மறு இரண்டில் பாவாத்பாவம். இப்போது கிரகங்களை ஆராயலாம். 3 ல் மிதுனத்தில் ஒரு கோணாதிபதி, ஒரு கேந்திராதிபதி, ஒரு பணபராதிபதி, ஒரு ஆபோக்லீபாதிபதி இருக்கிறார்கள். அது போல 9ல், தனுசிலும் ஒரு கோணாதிபதி, இரு கேந்திராதிபதி, ஒரு பணபராதிபதி, ஒரு ஆபோக்லீபாதிபதிகளும் இருக்கிறார்கள். இங்கேயும் மூன்று சுபர்கள். 3 லும் இரு சுபர்கள். இங்கே இரு ராஜ கிரகங்கள். 3 லும் ஒரு ராஜ கிரகம். இப்போது பார்வையைப் பார்க்கலாம். 3 ல் இருப்பவர்கள் 9 ஐப் பார்ப்பதும், 9 ல் இருப்பவர்கள் 3 ஐப் பார்ப்பதும் சம சப்தமம். பரஸ்பரம் பகைப் பார்வையாயினும், அது சுபர் பார்வை. குரு கூடுதலாக மேஷத்தையும், சிம்மத்தையும் பார்ப்பார். நல்லது தான். செவ்வாய் கூடுதலாக மீனத்தையும், கடகத்தையும் பார்ப்பார். மீனம் விரயம், கடகம் நீசம். இரு வீட்டாரும் தன்னுடன் சுபத்துவத்தில். ஒன்றும் மோசம் இல்லை. 

சனியார் மீனத்தையும் கடகத்தையும் ஒரு சேரப்பார்ப்பார். மீனத்தை விடவும் கடகத்துக்குத் தொல்லை அதிகம். பத்தில் ஆட்சியானாலும் அவர் பாதகாதிபதியும்  தான். துலாம் உச்ச வீடு. தொல்லை ஒன்றும் இல்லை. உச்ச ராகு கேதுவுக்குப் பார்வை ஒன்றும் வெளியில் இல்லை. அவர்களை யாரும் பார்க்கவும் இல்லை. ராகு, கேதுக்களுக்குச் சாரம் என்று பார்த்தால் ராகுவுக்கு சூரிய சாரம் ஆபத்தே. ராகு, சந்திர சாரத்தில் இருந்தால் கேது சனி சாரத்தில் இருப்பார். இதுவும் மகா ஆபத்தே!  செவ்வாய் சாரம் என்று பார்த்தால் விருச்சிகத்தில் கேது, புத சாரம் ஏறுவார். அதுவே உசிதம். 

ஆகவே எனக்கு  இது ஒரு அபூர்வமான அமைப்பாகத் தோன்றுகிறது. இது எப்போது வரும் என்று பின்னோக்கி 60 வருடங்களும் முன்னோக்கி 30 வருடங்களும் சென்று பார்த்ததில் இந்த அமைப்பு வரவில்லை. ஆனால் என்றோ ஒரு நாள் வந்தே தீரும். அப்படி வந்தால் பல ஆச்சரியங்கள் நிகழும். இந்த அமைப்புக்குச் சமமாகவோ,  கூடுதலாகவோ வேறு ஒன்று இருப்பதும் துர்லபம் தான். இந்த அமைப்பு சிறக்க வேண்டும் என்றால் கிரகங்கள் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குக் கூடிய வரை  உட்பட வேண்டும். 

அஸ்தாங்கதம், அதிசாரம், வக்ரம், ஸ்தம்பனம், வேதை மற்றும் கிரக யுத்தம் இவைகளால் பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். பேதம், உல்லேகம், அம்சுமர்த்தனம், அபசவ்யம் மற்றும் யுத்தம் என்று ஐந்து விதமாகக் கிரக யுத்தம் இருக்கும். அதை விரிவாகப் பின்னர் சொல்வேன். இவைகளையெல்லாம் தாண்டித் தான் இந்த அமைப்பு பலன் தர வேண்டும். தரும் என்று நம்புவோம். இந்த அமைப்பு அதிக பட்சமாக இரண்டரை நாள் அமுலில் இருக்கும். சந்திரன் ஒரு ராசியில் இருக்கும் கால அளவு அது. அவர் மாறிவிட்டால் இந்த அமைப்பு  சிதைவுறும். 

அப்போது நாளுக்கு இரண்டு மணி நேரமாக வரும் மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் அனைவரும். பாக்கியவான்கள். அவர்களிலும் பூர்வ புண்ணியம் மிக்கவர்கள் மஹா பாக்கியவான்கள். அவர்களிலும் அதீத புண்ணியம் உள்ளோர் மகான்கள். அந்த மகான்களிலும் தெய்வ அனுக்கிரகத்தால் மேன்மையுற்றவர் உத்தம மஹான். அவரால் இந்த உலகம் உய்யும். பூவுலகம் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும். புத்துயிரும் பெறும். அது எப்போதோ! 

ஆனால் இப்போதோ மற்ற பத்து பாவாத்பாவங்கள் காத்திருக்கின்றன. மேலும் மேஷ லக்னத்திற்கு இந்த அபூர்வமான அமைப்பின் விளைவுகளை அறிந்த போது மற்ற பாவங்களுக்கும் அறிய மனம் விழைகிறது. ஆனால் ஒரு உத்தமத்தைப் பார்த்ததால் ஒரு அதமத்தையும் பார்க்கலாம் என்று மனதிலும் தோன்றுகிறது. அது பெரிய விஷயமே இல்லை. 2019 டிசம்பர் மாதத்தில் கிரகங்களின் சேர்க்கை மற்றும்  பார்வைகளைக் கவனத்தில் கொண்டு ஆராய்ந்தால் ஏன் கொரோனா என்று தெரியவரும். அதை விடவா உலகத்துக்குப் பின்னடைவு? அடுத்து அது தான். ஜோதிடம் எனும் ஆழ் கடலின் கரையில் நின்று நான் அதிசயித்துக் கொண்டு இருந்தபோது ஆழ் கடல் தன் அபூர்வ முத்துக்களை என் முன்னே அள்ளிக் குவித்திருந்தது.

 அனைத்தும் ஓர்ந்து உணர்க !
 அன்புடன் அளித்தவர்: சக்திஸ்ரீ. BE ; M.A ; (ASTRO).

Saturday, January 2, 2021

பாவாத் பாவம்


ஒன்றாம் பாவம்: லக்னம்

ஒரு ஜாதகத்தில் முதல் பாவம் லக்னம். ஒன்றிற்கு உரியவர் ஒன்றிலேயே இருப்பதும், இரண்டுக்கு உரியவர் மறு இரண்டில் இருப்பதும், மூன்றிற்கு உரியவர் மறு மூன்றில் இருப்பதும், இப்படியே போய் ,12 க்கு உரியவர் மறு பன்னிரண்டில் இருப்பதும் தான் பாவாத்பாவம். இது உச்ச பலனுக்குச் சமம். குஜாதி ஐவர்கள் லக்னாதிபதிகளாக வந்து ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம், கேந்திரம் என்ற நிலைகளை அடைந்தால் அவர்களுக்குப் பஞ்ச மஹா புருஷ யோகம் ஏற்படும். முறையே சனியால் சசம், செவ்வாயால் ருசகம், புதனால் பத்ரம், குருவால் ஹம்ஸம், சுக்கிரனால் மாளவ்யம் உண்டாகும். பெயருக்கு ஏற்ற யோக பலன்கள். கடக, சிம்மங்களுக்கு செவ்வாயால் ராஜ யோகம் உண்டாகும். சிம்மமே மேலானது. கடகம் ஒரு படி கீழானது. ஏனெனில் செவ்வாய்க்கு கடகம் நீச வீடு.

இப்போது பாவாத் பாவம் பற்றிப் பார்ப்போம்.


முதலில் மேஷத்திலிருந்து ஆரம்பிக்கலாம்:


மேஷ லக்னத்தில் செவ்வாய் ஆட்சி. பஞ்ச மஹா புருஷ யோகம் வேறு. ருஷகம். 4ம் பார்வையால் கடகத்தைப் பார்க்கிறார். அந்த இடத்தின் ஆதி பத்திய விஷேஷங்கள் சிறக்கும். சந்திரனும் அங்கே இருந்தால் அவரின் காரகத்துவம் மேலோங்கும். மேலும் சந்திர கேந்திரத்தில், செவ்வாய் இருப்பதால் அவரின் பலமும் கூடும். கடகத்தைப் பார்ப்பதால் கல்வியில் பாண்டித்தியம் உண்டாகும். ஏனெனில் முருகன் ஞான பண்டிதன். செவ்வாயின் அதி தேவதை சுப்பிரமணியர். வீடு, மனை, வாகனம், நல்ல நண்பர்கள், சுப பந்துக்கள் அமையும். கடகத்தில் சந்திரன் இருந்தால் அது "காரகோ பாவ நாஸ்தி". மாத்ரு காரகன் மாத்ரு ஸ்தானத்தில் அமரக்கூடாது. பாவம் நசிக்கும். ஆயினும் யோக பலமுள்ள செவ்வாய் பார்ப்பதால் ஆபத்து இல்லை. செவ்வாயால் திடமான சரீரமும்,சந்திரனால் முக வசீகரமும் ஜாதகருக்கு அமையும்.

ஒரு வேளை சந்திரன் விருச்சிகத்தில் நீசம் பெற்றிருந்தாலும் செவ்வாய் ஆட்சி பெறுவதால் நீசம் பங்கமாகி சந்திரனுக்கு நீசபங்க ராஜ யோகம் உண்டாகும். தாய்க்கும் நலம். தாயாராலும் நலம். காரணம் சந்திரன் கடகத்திற்கு 5ல், கோணத்தில், யோகத்தில். செவ்வாய் துலாத்தைப் பார்க்கிறார். அது 7ம் வீடு. திருமணம், கூட்டுத் தொழில், மாரகம் இவைகளைச்சொல்லும். சுக்கிரன் இரட்டை மாரகன். மாரகன் தன் ஸ்தானத்தில், 7 ல். மாரகம் குறைவு படும். களத்திர காரகன் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில்"காரகோ பாவ நாஸ்தி". பாவம் நசித்து விடும். கூட்டுத்தொழில் தொல்லை தரும். சித்திரை சாரத்தில் இருந்தால் நசிவு குறையும். சுக்கிரனாலும் செவ்வாய்க்கும் பலம் குறையும். கேது, சூரிய சாரங்கள் நலம் பயக்கும், செவ்வாய் தன் 8ம் பார்வையால் விருச்சிகத்தைப் பார்க்கிறார்.அதுவும் அவர் ஆட்சி வீடு. அஷ்டமாதிபதி ஆட்சி, யோகம் கொண்டு தன் வீட்டைத் தானே பார்க்கிறார். அஷ்டமாதிபதிபத்திய தோஷம் பெருமளவில் குறையும். அவர் ஆயுள் ஸ்தானாதிபதியும் கூட. ஆயுள் தீர்க்கம். அஷ்டமாதி பதியின் ஒரு சிறப்பை வேறு ஒரு இடத்தில் சொல்வேன்.


அன்புடன் அளித்தவர் சக்தி ஸ்ரீ

MA (Astro);B.E;

Friday, January 1, 2021

கிரகங்களின் உச்ச பலன்களும் விசித்திரங்களும்!

கிரகங்கள் தம் உச்ச ராசியில் அதிக பட்ச சுப பலன்களைத் தருகின்றன என்பது பொது. அதி உச்சம் தாண்டினால் உச்ச பலன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்:


முதலில் சூரியன்:

மேஷத்தில் உச்சம்.10*யில் அதி உச்சம். பலனை எதிர் பார்ப்பவர்களுக்கு மிஞ்சுவது ஏமாற்றமே. ஏனெனில் மேஷத்தின் முதல் திரேக்காணம் விஷத் திரேக்காணம் அது 10*வரை. ஆனால் மேஷத்திற்கு முந்தைய ராசியான மீனத்தில் சூரியன் இருக்கும் போது உச்சாபிலாஷா என்ற நிலை ஏற்படும். பொதுவாக முக்கால் வாசி உச்ச பலனை மீனத்திலேயே தந்து விடுவார். இப்படி எல்லா கிரகங்களுக்கும் உச்சாபிலாஷா ஏற்படும். மீனத்தில் பூரட்டாதி 4ம் பாதமும், ரேவதியின் 4 பாதங்களும் உகந்தவை. பலன்களும் குருவையும் புதனையும் சார்ந்தே இருக்கும்.

இனி சந்திரன்:

அவர் ரிஷபத்தில் 3*யில் அதி உச்சம். உச்சாபிலாஷாவின்படி மேஷத்தில் வரும் போது பலன்.அஸ்வினி, பரணியைத் தவிர்த்தால் கார்த்திகை 1ல் முக்கால் வாசியும் கார்த்திகை 2ல் கால் வாசியும் பலன் கிடைக்கும். அதுவும் சூரியனைச் சார்ந்து.

அடுத்தது குரு:

கடகத்தில் 5*யில் அதி உச்சம். உச்சாபிலாஷாவின்படி மிதுனத்தில் செவ்வாய், ராகு, குரு சாரம் நன்றாக இருக்கும். அதிலும் ராகு சாரம் விஷேசம். ஏனெனில் ராகு, குரு சேர்க்கை குரு சண்டாள யோகம் தரும். குருவின் சுப பலன்கள் ராகுவால் வழங்கப்படும். முக்கால் வாசிப் பலன்கள் மிதுனத்திலும், கால்வாசிப் பலன்கள் புனர்பூசம் 4ம் பாதத்திலும் கிடைத்துவிடும்.

அடுத்ததாக புதன்:

புதன் கன்னியில் 15*யில் அதி  உ ச்சம். சிம்மத்தில் கேது,சுக்ர, சூரிய சாரங்கள். சுக்ர சாரம் அதி மித்ர சாரம்.மிளிரும்.சூரிய சாரமும் நட்பே. ஆனால் கேது சாரம் வித்தியாசமானது. புதன் வித்யா காரகன். கேது ஞான காரகன். வித்யை முதிர்ந்தால் ஞானம். ஞானம் முதிர்ந்தால் மோனம்.மோனம் என்பது ஞான வரம்பு. விநாயகர் மோனப்பொருள். புதனும் கேதுவும் வித்யா விஷயத்தில் ஒன்று. புதன் மகத்திலிருந்து வெளியேறும் போது ஞானக் கடலில் தோய்ந்து வெளி வருவார். இது வருடா வருடம் கூடும். ஆனால் அதற்கு கேது 3, 6, 10, 11ல் இருந்தாக வேண்டும். விருச்சிகமும் சரியே. முக்கால் வாசிப் பலன்கள் சிம்மத்திலும் கால் வாசிப் பலன்கள் கன்னியின் 2ம் திரேக்காணத்திலும் நடந்து விடும். ஏனெனில் முதல் திரேக்காணம் விஷத் திரேக்காணம்.

அடுத்தது சனி:

சனி துலாத்தில் 20* யில் அதி  உச்சம். உச்சாபிலாஷாவின்படி கன்னியில் சூரிய, சந்திர, செவ்வாய் சாரங்கள் அனைத்தும் பகையே. துலாத்தின் இரண்டாம் திரேக்காணம் விஷத் திரேக்காணம். அது ராகு சாரம். ராகுவால் சில கெடுதலான நன்மைகள் உண்டு. அதாவது ஒருவர் தன் காசில் நண்பருக்குச் சாராயம்  வாங்கிக் கொடுப்பது போல. மொத்தத்தில் சனி உச்சத்தால் எந்த லாபமும் இல்லை.

அடுத்தது செவ்வாய்:

செவ்வாய்க்கு 28*யில் மகரத்தில் அதி உச்சம். உச்சாபிலாஷாவின்படி மூலம் கேது சாரம். கேது, செவ்வாய் போல பலன். பூராடம் சுக்ர சாரம். சுக்ரன் சம உறவுடையவன். உத்திராடம் சூரிய சாரம். அதி மித்ர சாரம். மகரத்தில் செவ்வாய் உச்சம், வக்ரம், ஸ்தம்பனம் என்ற மூன்று நிலைகளில் எட்டு மாதங்கள் வரை இருந்திருக்கிறது. உச்சத்தில் சுப பலன்.வக்ரத்தில் செவ்வாய் ராஜா போல இருப்பார். ஸ்தம்பனத் திலும் (ஆடாமல், அசையாமல்) சில நாட்கள் தன் சுப பலத்தைத் தக்க வைத்துக் கொள்வார். தன் சுய சாரத்தில் அதி உச்சம் பெறும் ஒரே கிரகம் செவ்வாய் தான். செவ்வாய் உச்சம், அதி உச்சம் பெற்ற ஜாதகர்கள் உன்னத நிலையை அடைந்ததைப் பார்த்திருக்கிறேன்.

அடுத்தது சுக்ரன்:

 சுக்ரன் மீனத்தில் 27*யில் அதி உச்சம். உச்சாபிலாஷாவின்படி செவ்வாய், ராகு சாரங்கள் வீண் போகாது. குரு சாரம் சுமார். மீனத்தின் கால் வாசிப் பலன்களில் கொஞ்சம் சனி புத சாரத்தால் வீணாகி விடும். ஏனெனில் மீனத்தின் 2ம் திரேக்காணம் விஷத் திரேக்காணம்.

கடைசியாக ராகு & கேது:

ராகு ரிஷபத்திலும் கேது விருச்சிகத்திலும் உச்சம். இதில் மாற்றுக் கருத்து உண்டு. ஆனால் எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதி உச்சமென்பதும் இல்லை. உச்சாபிலாஷாவும் இல்லை. பொதுவாக ராகு சனியைப் போலவும் கேது செவ்வாயைப் போலவும் பலன்கள் தரும். எப்போதும் வக்ரம். அதீத பலம். தான் நின்ற ராசி  நாதன் போலவும், தன்னுடன் சேர்ந்தவர் போலவும், தன்னைப் பார்த்தவர் போலவும், தான் நின்ற சார நாதன் போலவும், பலன்கள் தருவர். தன் உச்ச ராசியில் தான் நின்றாலும் மற்ற எவர் நின்றாலும் சாரத்திற்கு ஏற்பவே பலன்.

பொதுவாக:

அதி உச்ச பாகையில் கிரகங்கள் பலன்கள் ஒன்றும் தராது. அதன் முந்தைய பாகை வரை தான் அதி உச்ச பலன். உச்ச பலன் நன்கு பெறுவதற்கு உச்ச கிரகங்களின் சார நாதர்கள் நல்ல இடங்களில் பலத்துடன் இருக்க வேண்டும். குறைந்த பட்சம் சம உறவிலாவது அமைய வேண்டும். அனைத்தும் தேர்ந்து தெளிக.! 

அன்புடன் அளித்தவர் சக்தி ஸ்ரீ

 MA (Astro);B.E;

இனி மேல்: பாவாத் பாவம்.

ஒன்பது கிரக சம்பந்தமும், கிரக அஸ்தாங்கதமும், கிரக யுத்தமும், கொரோனாவும்.

  2019 - மார்ச்7-5 மணி 52 நிமிடம். சனி தனுசில் இருந்தபோது ‌‍‍‍‍‍ ‌கேதுப் பிரவேசம்.‌ தனுசில் இரு கிரகங்கள். சனி கேதுவின் பிடியில் வந்தார்.  ...